இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுதல்

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Apr 05, 2020


 கர்த்தருக்குள் பிரியமான ஓசன்னா சபையின் ஊழியர்கள், குடும்பங்கள், விசுவாசிகளான யாவருக்கும் கிறிஸ்துவின் சத்திய சபையின் உபதேசங்கள் மூலம் சில கருத்துக்களை சபைகளுக்கு எழுதுகிறோம்.”

எபேசியர் 4:17-24

ஆதலால்,கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாதிருங்கள்.

அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;

உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களோ, இவ்விதமாயக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து அவரால் போதிக்கப்பட்டீர்களே.

அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை (ஆதாம்) நீங்கள் களைந்துபோட்டு,

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

மெய்யான நீதியிலும், பரிசுத்ததிலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் (கிறிஸ்துவை) தரித்துக்கொள்ளுங்கள்.

முந்தின நடக்கைகள் - களைந்து போட வேண்டும் (பாரம்பரியம், இவ்வுலக வழக்கம், நம்முடைய மனதும், மாம்சமும், விரும்புகிறதுமான இச்சைகள்)

பிந்தின நடக்கை – புதிய மனுஷன் - கிறிஸ்துவை தரித்துக்கொள்ளுதல்

கிறிஸ்துவை எப்படி தரித்துக்கொள்ள வேண்டும்?

பழைய வாழ்க்கைகள் அத்தனையும் களைந்து போட்டு கிறிஸ்துவை  தரித்து கொள்ள வேண்டும்.

கலாத்தியர் 3:26,27                                                         

நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய  புத்திரராயிருக்கிறீர்களே.

 

ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.”

கிறிஸ்துவுக்குள் எப்படிப்பட்டவர்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும்?

ஞானஸ்நானம் என்பது பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைப்பது.

ஞானமாகிய கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய உள்ளத்தில் பிறக்கவேண்டும், பிள்ளை வளர்ந்து ஆவியிலே பெலன் கொண்டு ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

அதுதான் தேவதூதன் (மரியாள்) அவள் இருந்த வீட்டில் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்; ஸ்திரிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

மரியாள் என்பவள் கன்னிகையாக இருந்தாள். கன்னிகை என்பது இஸ்ரவேல். இஸ்ரவேல் என்பது சபையை காட்டுகிறது. சபை என்பது ஸ்திரீ. அதுதான், கன்னிகையான மரியாளை பார்த்து ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.

பரிசுத்த வேதாகமத்தில் அநேக விதமான ஸ்திரீயை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீதிமொழிகள் 31:10  “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.” (அவர் தான் கிறிஸ்து,  பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி)

நீதிமொழிகள் 3:13-15

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது. நீ இச்சிக்கதக்க தொன்றும் அதற்கு நிகரல்ல.

ஆதலால், ரோமர் 6:19- ன் படி உங்கள் மாம்ச பெலவீனத்தின் நிமித்தம் மனுஷர்  பேசுகிற பிரகாரமாய்ப்  பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்ததிற்கும் அக்கிரமத்திற்கும் ஒப்புக்கொடுத்தது போல, இப்பொழுது (ஞானஸ்நானத்தின் போது) பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

 

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.

ஞானஸ்நானம் என்பது பாவத்துக்கு மரித்து பின் அடக்கம் பண்ணப்பட்டு கிறிஸ்துவின் ஜீவனோடு கூட எழுந்திருத்தல் என்பதை நாம் யாவரும் சரியாக அறிய வேண்டும்.