தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 48:9
தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் செய்கிறவர்களாகவும், தங்களை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கிறவர்களாகவும் மாற வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவாகிய பாறையின் மேல் அஸ்திபாரம் போடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 4:1-5
சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது,
அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோமென்று அவர்களோடே சொன்னார்கள்.
அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.
அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள்.
எஸ்றா 4:1-5 -ல் எழுதப்பட்டுள்ள காரியங்களை குறித்து பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று எழுதப்பட்டுள்ளது; என்னவென்றால் உலகத்தின் ஆவியால் பலவித வஞ்சகசெயல்களால் நம்முடைய ஆத்துமா சிறைபடுத்தப்பட்டு இருக்கும் போது, கிறிஸ்துவோடு நாம் உடன்படிக்கை பெற்றுக்கொள்ளாதபடி உலகத்தோடு ஐக்கியதைப்பட்டு உள்ளத்தில் பலவித உலக ஆசைகளை வைத்துக்கொண்டு, கர்த்தருக்கு பலியிடுவோம். ஆனால் அவ்வித பலிகளில் தேவன் பிரியமாயிருப்பதில்லை. நாம் நினைப்பது என்னவென்றால் நாமும் கர்த்தரை தான் தேடுகிறோம் என்றும், நாமும் உண்மையான இஸ்ரவேலர்கள் தான் என்றும் சொல்லுகிறோம். ஆனால் நாம் கிறிஸ்துவோடு உடன்படிக்கை பெற்றுக்கொண்டு கிறிஸ்துவின் ஆலயமாக கட்டப்பட்டு கர்த்தர் நம்மை எழுப்புகிறாரென்று நமக்கு விரோதமான சத்துருக்கள் அதனை அறியும் போது, யார் மூலமாகவோ பிசாசானவன் தந்திரத்தோடு நம் கைகளை தளரப்பண்ணி, நாம் கர்த்தருக்குள் வாழவேண்டும் என்று நினைக்கும்போது நமக்கு விரோதமாக நம் உள்ளத்தின் ஆலோசனையை அபத்தமாக்கி கைகூலி கட்டுகிறான் என்பதனை புரிந்துக்கொண்டு, கர்த்தரின் சித்தம் இன்னது என்று அறிந்து கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.