தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கலாத்தியர் 3:11
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவே என்றென்றைக்கும் நீதிமானாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் பேரில் மட்டும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 32:1-5
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம்மூண்டது.
மேற்கூறபட்ட வசனங்களில் யோபு சொல்வது எல்லாம் நாம் தியானிக்கும் போது கர்த்தருக்கு பிரியமாக அவன் நடந்துக்கொண்டான் என்று தன்னை தான் நீதிமானாக்கிக்கொள்கிறான். ஆதலால் அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூக்கு கோபம்மூண்டு, யோபு தேவனைப் பார்க்கிலும் தன்னைதான் அதிக நீதிமானாக்கினதினிமித்தம் அவன் மேலும் அவனுக்கு கோபம் மூண்டது. மேலும் யோபுவுக்கு அந்த மூன்று சிநேகிதருக்கும் கொடுக்கதக்க மறுமொழி அகப்படாதிருந்தும் அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம் அவர்கள் மேலும் அவனுக்கு கோபம் மூண்டு, அவர்கள் தன்னை பார்க்கிலும் வயது சென்றவர்களானபடியால் யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான். அந்த மூன்று மனுஷரும் சரியான மறு உத்தரவு கொடுக்காததினால் கோபத்தோடு எலிகூ கூறியது என்னவென்றால்
யோபு 32:6-17
ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.
அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
மேற்கூறபட்ட வார்த்தைகளையெல்லாம் சொல்லி விட்டு அவன் சொல்கிறான் வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்குகிறது. என் உள்ளம் அடைபட்டிருந்து , புது துருத்திகளை முதலாய் பீறப்பண்ணுகிற புது ரசத்தை போலிருக்கிறது. பின்னும் அவன் சொல்வது, நான் ஆறுதலடையும்படி பேசுவேன், என் உதடுகளை திறந்து பிரதியுத்தரம் சொல்வேன். நான் ஒருவனுடைய முகத்தை பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக. நான் இச்சகம் பேச அறியேன்; அவ்விதம் பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, இதன் கருத்துக்கள் என்னவென்றால் யாராவது தன்னை தான் நீதிமானாக்கி பேசிக்கொண்டால் நாம் அதனை கிறிஸ்துவின் ஆவியினால் முறியடித்து விடும்படியான கிருபை பெற்றுக்கொண்டு பேசுகிறவர்களாக காணப்பட வேண்டும். அப்படியானால் யாரும் தன்னை தான் நீதிமானென்று எண்ணமாட்டார்கள். கிறிஸ்து ஒருவரே நீதிமான். அவர் ஆவியினால் நம் உள்ளம் நிரப்பப்படுமானால் கர்த்தரே எல்லாவற்றிலும் உயர்ந்து காணப்படுவார். அவரே நீதிமானாக என்றென்றைக்கும் நம்முடைய வாழ்வில் விளங்கிக் கொண்டிருப்பார். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.