தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 139:19
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் சர்வவல்லவரோடே வழக்காட முடியாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நம்முடைய கர்த்தா் ஒருவர் தான் எல்லாவற்றின் சிருஷ்டிகர் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 40:1-24
பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரவாக:
சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவுசொல்லு.
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,
பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
வசனங்களில் கர்த்தர் யோபுவுக்கு மீண்டும் பிரதியுத்தரமாக கூறுவது என்னவென்றால், முந்தின 2 அதிகாரங்களில் கேட்காத கேள்விகள் இங்கு கேட்கப்படுகிறது. இதனை நாம் பார்க்கும் போது நாம் கர்த்தரிடத்தில் எந்த விதத்திலும் நாம் சரியாக நடந்தோம் என்று சொல்லி வழக்காட முடியாது என்பதனை தெரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாமலும் அவருக்கு யாரும் புத்தி புகட்டி படிப்பிக்க முடியாது. அவர் நம்மிடத்தில் நின்று கேட்கிற கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாது. மேலும் அவர் செய்கிற கிரியைகளில் ஒரு கிரியைகள் போலும் எந்த மனுஷனாலும் செய்ய முடியாதது. யோபு தன்னை நீதிமானாக்கி கொள்ளும்படிக்கு முந்தின யோபின் வார்த்தைகளிலெல்லாம் தேவன் மேல் குற்றம் சுமத்தி வந்ததை வாசிக்க முடிகிறது. அப்படியாக நம்மிலும் அநேகம் பேர் அவ்வாறு செய்கிறோம். இதன் காரணம் என்னவென்றால் மனுஷனுக்குள் இருக்கிற அகந்தை, பெருமை தான் தேவனை குற்றம் பார்க்க வைக்கிறது. ஆதலால் கர்த்தர் பிகெமோத்தை நமக்கு முன்பாக உதாரணம் வைக்கிறார். என்னவென்றால் அதனுடைய கிரியையை குறித்து கூறுகிறார். அந்த கிரியை தேவன் உண்டு பண்ணினது. அவர் கிரியைக்கு முன்பு யாரும் நிற்க முடியாது, யாரும் பிடிக்க முடியாது, அதன் மூக்கை யாரும் குத்த முடியாது.
பிரியமானவர்களே, மேற்கூறபட்டவற்றின் கருத்துக்கள் என்னவென்றால் தேவன் எவ்வளவு சர்வவல்லமையுள்ளவர் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் அவரை பற்றி அறிந்தும் யாரும் அவரிடத்தில் வழக்காட முடியாது. அவர் செய்த கிரியையையே நம்மால் அடக்ககூடாதிருக்க; அவரிடத்தில் நாம் எப்படி கேள்வி கேட்க முடியும். இப்படிப்பட்ட தேவன் எவ்வளவு நம்மை விட மேலானவர்; அவர் தேவன் என்பதனை உணர்ந்து நம்முடைய பெருமை, அகந்தை எல்லாவற்றையும் நம்மை விட்டு அகற்றி, துன்மார்க்கத்தை நம்மில் அழியபண்ணி, நம்மை கர்த்தரிடத்தில் தாழ்மைப்படுத்தி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.