தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஊழியக்காரர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவினால் நீதிமான்களாக்கப்படவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 34:1-17
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்?
உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
மேற்கூறபட்ட வசனங்களில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனை துதித்து பாடின பாட்டாகும். அது எப்பொழுது என்றால் தாவீது அபிமெலேக்குக்கு முன்பாக வேஷம் மாறின போது அவனால் துரத்திவிடப்படுகையில், அவன் தப்பி வந்தபடியால் கர்த்தர் செய்த இந்த பெரிய செய்கையைக் குறித்து தேவனை துதிக்கிறான். இது நம்முடைய வாழ்வில் கிறிஸ்து நம்மில் இருந்து செய்கிற செய்கைகளாகும். என்னவென்றால் அவர் ஞானத்தோடு நம்மில் நடந்துக் கொள்கையில் தேவன் நல்லவர் என்பதனை நாம் ருசித்து அறிந்துக்கொள்ள முடியும். அல்லாமலும் நாம் எப்போதும் கர்த்தருக்கு பயந்து நடக்க வேண்டும், அவரையே நம்பி வாழ வேண்டும், கர்த்தரையே எப்போதும் மகிமைப் படுத்த வேண்டும், கர்த்தரையே எப்போதும் தேட வேண்டும், தீமையை விட்டு விலக வேண்டும், மற்றவர்களுக்கு நன்மை செய்து சமாதானத்தை தேட வேண்டும். அவ்விதம் கர்த்தருக்கு பிரியமான நன்மை செய்வோமானால் அவருடைய கண்கள் நம்மையே நோக்கியிருக்கும். அதுமட்டுமல்லாமல் அவருடைய செவிகள் நம்முடைய கூப்பிடுதலுக்கு திறந்திருக்கும். நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக செயல்படுவார். அவருடைய முகம் தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக செயல்படும். நீதிமான்கள் கூப்பிடும் போது, கர்த்தர் கேட்டு எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். மேலும் கர்த்தர் செய்வது
சங்கீதம் 34:18
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.
மேற்கூறபட்ட கருத்துக்கள் கர்த்தர் நீதிமான்களை நேசிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; ஆனாலும் கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார், எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. தீமை துன்மார்க்கனை கொல்லும்; நீதிமானை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்கிறார். ஆதலால் நாம் எப்போதும் நம்முடைய ஆத்துமாவை மீட்டுக்கொள்கிற கிறிஸ்துவினிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.