தேவனுக்கே மகிமையுண்டாவதாக
தீத்து: 3:7
அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
இரட்சிப்பின் வஸ்திரம் காக்க வேண்டிய விதம்:-திருஷ்டாந்தம்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் வஸ்திரத்தின் தோற்றங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று சில காரியங்கள் தியானித்தோம். வஸ்திரம் என்றாலே கிறிஸ்துவை தரிக்கிறதை குறித்து பழைய ஏற்பாட்டின் பகுதியில் ஆரோனும், அவனுடைய குமாரருக்கு பரிசுத்த வஸ்திரங்களை உண்டு பண்ணுகிறதை நாம் திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அந்த வஸ்திரத்தில் ஏபோத்தின் மேல் இருக்க வேண்டிய கச்சை, ஏபோத்தை ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள் துண்டுகளில் மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்பட வேண்டும்.
இரண்டு துண்டுகளின் இரண்டு கோமேதக கற்கள் எடுத்து இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டும் படியாக எழுதப்பட்டிருப்பது நம் ஆத்மீக வாழ்க்கையில் அந்த இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள் பதிக்கபட்டிருக்க வேண்டும் அதற்கு தான்,
யாத்திராகமம்: 28:12
ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியா கற்களாக வைக்கக்கடவாய்.
இந்நாளில் அநேகம் பேர் பழைய ஏற்பாட்டு பகுதியில் வாசிக்கிற வேத வாக்கியங்களை நிர்விசாரபடுத்தி விடுவார்கள். பிரியமானவர்களே நம்முடைய விசுவாசத்தினால் நியாயப்பிரமாணத்தை அவமாகாதப்படி நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்த வேண்டும். நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் இல்லை நியாயப்பிரமாணம் தான் பாவம் இன்னதென்று நமக்குப் போதிக்கிறது.
ரோமர்: 5:13
நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ரோமர்: 7:7,8
ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
ஆதலால் பிரியமானவர்களே நம்மளில் நியாயப்பிரமாணத்தை நாம் பழமையான எழுத்தின் படியல்ல புதுமையான ஆவியின் படி ஊழியஞ் செய்யத்தக்க நியாயப்பிரமாணம் அவமாகாதபடி நாம் நிலை நிறுத்துகிறவர்களாக காணப்பட வேண்டும்.
யாத்திராகமம்: 28:15
நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
இவை என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களாகிய பன்னிரண்டு நாமங்களின் பெயர் பதிக்கப்பட்ட பன்னிரண்டு இரத்தின கற்கள் நம்முடைய அஸ்திபார கற்களுக்கு இருக்க வேண்டுமென்பதை தேவன் நமக்குத் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
நியாயவிதி மார்பதக்கம் ஆசாரியனுடைய வஸ்திரமாக இருக்கிறது. நியாயவிதி மார்பதக்கம் ஆசாரியன் தரிக்க வேண்டுமென்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் சத்தியத்தின்படி இருக்கிறதா என்று சோதித்து, நம்மை நியாய தீர்க்கிறவராயிருக்கிறார் என்று தேவன் தம்முடைய ஆசாரியர்கள் மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
நம்மிடத்தில் பன்னிரண்டு விதமான கனிகளை தரும் ஜீவவிருட்சமாகிய கிறிஸ்து நம்முடைய சீயோன் நகரின் மூலை கல்லாக விளங்குகிறார்.
இரண்டு வித கோமேதக கற்கள் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள் ஏபோத்தின் மேல் இருக்கிற விசித்திர கச்சைகளில் பதிக்கப்பட்டு அது இரண்டு தோள் துண்டுகளின் மேலும் அதின் இரண்டு முனைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கர்த்தத்துவத்தை தோளின் மேல் வைத்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக காட்டுகிறார்.
மேலும் தேவன் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை காண்பிக்கும் போது அதின் மகிமை விலையுயர்ந்த பன்னிரண்டு இரத்தின கற்களின் பிரகாசம் போல பிரகாசித்ததை வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரம் அழகாக எடுத்துக் காட்டுகிறது.
இவ்விதம் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் அலங்காரம் நம் இரட்சிப்பின் வஸ்திரமாக மிகவும் தேவ மகிமை நிறைந்ததாக காணப்பட வேண்டும் என்று பிதாவாகிய தேவன் நம் மேல் திருஷ்டாந்தபடுத்துகிறார்.
மேலும் அந்த பகுதியை நாம் வாசிக்கும் போது சத்தியம் நம்மை விட்டு நீங்காத படி தேவனுடைய வசனமாகிய கற்பனைகளில் ஸ்திரப்படுத்த வேண்டும்.
யாத்திராகமம்: 28:30
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக் கொள்ளவேண்டும்.
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் இருதயத்தின் மேல் பதிப்பது திருஷ்டாந்தம். என்னவென்றால் தீர்க்கதரிசனம் வெளிப்பாடு வரங்களாக கிறிஸ்து இருதயத்தில் வசிக்க வேண்டும் என்பதை தெளிவுக்காக திருஷ்டாந்தபடுத்துகிறார். அது ஜனங்களின் குற்றத்தை எடுத்து சொல்லும் படியாக அது தான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் நம்மை அவருடைய கிருபை, கிருபை வரங்களால் நிறைக்கிறார். அதை குறித்து தான்,
யாத்திராகமம்: 28:31-35
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.
தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலையான ஒரு நாடா சுற்றிலும் இருக்கவும் வேண்டும்; அது கிழியாதபடிக்கு மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.
அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம் பழமுமாய்த் தொங்குவதாக.
ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும் போதும், வெளியே வரும் போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களின் விளக்கங்கள் என்னவென்றால் சத்தியத்தில் ஒன்றும் தவறாத படி நடந்து ஆவியின் கனிகள் அத்தனையும் பெற்று கொண்டு பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் இன்ப சத்தம் நம் காதில் எப்போதும் தொனிக்க வேண்டும்.
அதை தான் அங்கிகளின் ஓரத்தில் பொன்மணியும், மாதாளம் பழமும் தொங்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. மாதாளம் பழம் மணவாட்டியையும், பொன்மணி மகிமையால் நிறைந்த அபிஷேகத்தின் அன்னிய பாஷைகள், பற்பல பாஷைகள் பேசுவது இவ்வித சத்தம் ஆத்மாவில் இருந்து எழும்பினால் நம் ஆத்துமா சாகாத படி பாதுகாக்க கர்த்தர் கிருபை செய்கிறார். இவ்விதமாக கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீ ர்வதிப்பராக. ஜெபிப்போம். ஒப்புக்கொடுப்போம்.
-தொடர்ச்சி நாளை.