தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம்: 21:3
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பாகையும் - பட்டமும் விளக்கம்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் இரட்சிப்பாகிய வஸ்திரம் எவ்விதம் காத்துக் கொண்டு அதின் மகிமை எப்படியிருக்க வேண்டும் என்பதனை குறித்து சில காரியங்களை வேத வசனத்தில் கூட நாம் தியானித்தோம். இந்த நாளில் நாம் தேவனுக்கு எப்படிபட்ட ஆராதனை செய்ய வேண்டும் (பலி செலுத்த வேண்டும்) என்பதை குறித்து தியானிக்க போகிறோம்.
முதலில் நாம் யாராக இருந்தாலும் தேவனிடத்தில் வந்து தேவன் நம்மளில் எந்த மாற்றம் வர வேண்டுமென்று விரும்புகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தேவன் நம்மிடத்தில் பரிசுத்தத்தை விரும்புகிறவர் எப்படியென்றால் பரிசுத்தம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வர வேண்டுமானால் கீழ்ப்படிதல், பக்தி இவை கட்டாயம் உண்டாயிருக்க வேண்டும். நாம் அவர் வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும் போது நமக்குள்ளாக ஒரு பயபக்தி உண்டாகும். பயபக்தி நம் உள்ளத்தில் வரும் போது தேவசித்தம் இல்லாத எல்லா காரியங்களையும், சிந்தைகளையும் புறக்கணித்து விட்டு அருவருப்பானதும் அசுத்தமானதும், சீ என்று வெறுத்து தள்ளுகிறதான எல்லாவற்றையும் விட்டு விடுவோம். அதன் பிறகு தேவன் அவருடைய வஸ்திரத்தை நமக்கு தந்தருள்வார். அவருடைய வஸ்திரம் என்பது இரட்சிப்பின் வஸ்திரம் அது ஒரு பாத்திரமாக காணப்படுகிறது. அந்த பாத்திரம் அழுக்கு வராதபடி நாம் எப்போதும் உள்புறமும், வெளிபுறமும் சுத்தம் செய்து சுத்த பாத்திரமாக காணப்பட வேண்டும். அந்த பாத்திரம் தான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி. அந்த மணவாட்டியின் அனுபவம் தான் நமக்கு அனுதினம் போஷித்து பரலோக மன்னாவை தந்து நம் பரலோக இன்பங்களை நமக்கு தந்து கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் நம் ஆத்துமா ஐக்கியப்படுகிறது.
அதைத்தான் சங்கீத புஸ்தகத்தில் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுங்கள் என்று தேவனுடைய வார்த்தையானது நமக்கு புத்தி விளம்புகிறது. அப்போது தான் நாம் அனுதினம் பரிசுத்தபட முடியும். அதற்கு தான்,
யாத்திராகமம்: 28:36-38
பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாகவெட்டி,
அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்கவேண்டும்.
பிரியமானவர்களே இந்த தேவனுடைய வார்த்தைகளை நாம் சிந்தித்து அநேகம் பேர் உலகில் மனுஷனால் உண்டாக்கப்பட்ட பட்டத்தை பாகையில் மாட்டிக் கொள்கிறார்கள். அது அழிந்து போகிற பட்டம் அழியாத நித்திய அலங்கரிப்பாயிருக்கிற பட்டத்தை தேவன் நமக்குள்ளாக வாசமாயிருக்கிற ஆவியானவருக்கு கொடுக்கிறார். ஆவியானவருக்கு கொடுக்கிறது என்றால் அது நமக்கு தான் தருகிறார்.
எழுத்தின் படி பட்டதாரி ஆகாமல் ஆவியின் பட்டதாரி ஆக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். உலக பிரகாரமாக மாம்சத்தின் படி பட்டம் ஆனால் அவனுக்குள் ஆத்மாவின் ஜீவன் இல்லை. அதனை கர்த்தர் சொல்லுகிறது,
ரோமர்: 8:13,14
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர்: 7:6
இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ் செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
II கொரிந்தியர்: 3:2-6
எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.
எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
பிரியமானவர்களே ஆரோனிடம் கர்த்தர் பாகையிலே பசும்பொன்னினால் பட்டம் எழுதி அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்ட சொன்னது நமக்கு தேவன் ஆவிக்குரிய பரிசுத்த அபிஷேகத்தின் பட்டம் கிறிஸ்து மூலம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அந்த பாகை என்பது நமக்கு உள்ளான மனுஷனில் பொற்கீரீடம் தரிப்பிக்கபடும் என்பதையும் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
இந்த பரிசுத்தமாகிய பட்டம் எந்த M Th படித்தாலும் (வேதாகம கல்லூரி) PhD படித்தாலும் கிடைக்காது. நாம் நேராக தேவனிடத்திலிருந்து கிறிஸ்து மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் அநேகம் பேர் இதனை ஒரு பிழைப்பின் தொழிலாக வியாபாரமாக கருதி வேதாகமக் கல்லூரி, பட்டப்படிப்பு என்று பல பட்டங்களை மக்களுக்கு காகிதத்தினாலும், மையினாலும் பட்டம் தரித்து தலையில் பாகைகளை அணிந்து தேவனை ஏமாற்றி மனுஷர்களை வஞ்சித்து இரட்சிப்பின் வழி எது என்று தெரியாமல் பரிசுத்தம் வெளிப்படாமல் மக்கள் பாதாளத்தின் வேதனை அனுபவித்து மாண்டு போகிறார்கள். அன்பான இதனை வாசிக்கிற சகோதர, சகோதரிகளே இனி மேலாவது வஞ்சிக்கப்படாமல் நாம் கிறிஸ்துவின் நிருபமாயிருந்து மனுஷர்களிடத்தில் உடன்படிக்கை எடுக்காமல் தேவனிடத்தில் உடன்படிக்கை பெற்று ஆவிக்குரிய வழி இன்னதென்று அறிந்து நித்திய வழியிலே நடக்க நாம் யாவரும் தேவனிடத்தில் கேட்டறிந்து பெற்றுக் கொள்வோம். உலகத்தில் பட்டம் தந்து பாகையை வைத்து முடிசூட்டுவார்களானால் அதைப் பெற்றுக் கொண்டு அதன் பேரில் நம்பிக்கை வைப்பீர்களானால் அழிந்து போவீர்கள்.
பிரியமானவர்களே நாம் யாவரும் அழிந்து போகாதபடி கிறிஸ்து மூலம் உத்தம ஆசீர்வாதமாகிய பொற்கிரீடம் தரிப்போம். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் படியாக நாம் ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.