தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லேவியராகமம் 19: 4
விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
கர்த்தராகிய தேவன் யாருக்குள்ளில் பிரவேசிக்கிறார் -விளக்கம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நம்முடைய தேவனாகிய கர்த்தர் மிகவும் இரக்கம் உள்ளவராகக் காணப்படுகிறார் என்பதை இஸ்ரவேல் ஜனங்களை வைத்து விளக்கி காட்டுகிறது எப்படியென்றால், அவர்கள் விக்கிரகங்களை செய்வித்தும் மகா பெரிய பாவஞ் செய்தும், தேவன் அவர்களை நிர்மூலம் பண்ணாமல், மோசேயிடம் இஸ்ரவேலரை அழைத்து பாலும், தேனும் ஓடுகிற தேசத்திற்கு போ, உங்களுக்கு முன்னால் என் தூதனை அனுப்புவேன், என்று சொல்கிறது என்ன வென்றால் நம்மை அழிவினின்று இரட்சிக்கிற கிறிஸ்துவைப் பற்றி அந்த இடத்தில் சொல்லப்படுகிறது. அவரே கிறிஸ்துவாக வரப்போகிறார் என்பதை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி, நம்முடைய பாவங்கள், சாபங்கள் அக்கிரமங்கள் என்பவைகளுக்காக அவர் மரித்து, அவர் தேவனுடைய வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டு, அவரை விசுவாசிக்கிறவர்களின் ஆத்துமாவை அவரோடுக்கூட உயிர்ப்பித்து, எழுப்பி, உன்னதங்களில் அவரோடு கூட உட்கார வைத்து, இரவும்,பகலும் எந்த சேதமும் வராமல் உறங்காமல் தூங்காமல், நம்மை பத்திரமாக பாதுக்காக்கும் படியாக அவரை நம் எல்லாவருக்காக ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் நமக்கு நிச்சயம் அருளுவார்.
சங்கீதம் 121:1-8
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
ஆதலால் பிரியமானவர்களே நாம் தேவனுடைய வார்த்தைகளை முழுமனதோடு விசுவாசித்து, அந்தவார்த்தையே தேவனென்று ஏற்றுக்கொள்வோமானால், நிச்சயமாகவே வானத்தையும், பூமியையும் உண்டாக்கின தேவனிடத்திலிருந்து நமக்கு ஒத்தாசை வரும்.
சங்கீதம் 115:13-15
கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
இவ்விதமாக கர்த்தர் பெரியோரையும், சிறியோரையும் ஆசீர்வதிக்கும் படியாக நம்மை கர்த்தருக்கென்று பிரதீஷ்டிக்கும் முதல் நாளிலே கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்பதை கழிந்த நாளில் தியானித்தோம்.
பிரியமானவர்களே நாம் பிரதீஷ்டை பண்ணுமபோது, எந்தவகை விக்கிரகங்களுக்கும் நம்மிடத்தில் இடம் கொடுக்காதபடி நம்மை வெறுமையாக்கி ஒப்புக்கொடுத்து கர்த்தருக்காய் நம்மை பிரதீஷ்டிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய உள்ளான சரீரமாகிய கூடாரத்திற்குள் தேவன் வாசம்பண்ணுவார், அப்போது அது தேவனுடைய வீடாகவும், வாசஸ்தலமாகவும், ஆலயமாகவும் விளங்குகிறது.
எப்படியெனில் சங்கீதம் 115:1-8
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.
அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்?
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
ஆதலால் இஸ்ரவேலரே, கர்த்தரை மட்டும் தேவனென்று நம்பி அவரை மட்டும் சார்ந்து வாழுங்கள். எந்த விக்கிரகத்தையும் தேவனென்று எண்ணாதிருங்கள்.
சங்கீதம் 115:9-12
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
அதைத்தான் கர்ததர் சொல்கிறார் யாத்திராகமம் 33:2-10
நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
பின்பு மனுஷன் பாவஞ்செய்து அழிந்துபோகாதபடி காக்கும்படியாகவே நீங்கள் போட்டிருக்கிற ஆபரணங்களை கழற்றிப்போடுங்கள், இல்லாவிட்டால் நான் ஒரு நிமிடத்தில் எழும்பி உங்களை நிர்மூலம்பண்ணுவேன், ஆபரணங்களை கழற்றி விட்டால் பின்பு நான் உங்களுக்கு செய்ய வேண்டியதை அறிவேனென்று மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல சொன்னார்.
மோசே ஜனங்களிடம் கர்த்தரின் வார்த்தைகளைச் சொன்னப்போது, உடனே அவர்கள் கர்த்தரின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து எல்லாரும் தாங்கள் போட்டிருந்த ஆபரணங்களை எல்லாம் ஓரேப் மலையருகே கழற்றிப் போட்டார்கள்.
அதற்கு பின்பு தான் மோசே கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் போது மேகஸ்தம்பம் கூடாரத்திற்குள் இறங்கியது. பின்பு கர்த்தர் மோசேயுடன் பேசினார். பின்பு கர்த்தர் மோசேயோடு முகமுகமாய் பேசுகிறார். இவ்விதமாக தேவன் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால், நம்முடைய உள்ளான மனுஷன் ஆசரிப்பு கூடாரமாகவும், நாம் ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் பெற்று கிறிஸ்துவோடும், கிறிஸ்து நம்மோடும் பேசுவதற்காக தேவன் திருஷ்டாந்தப்படுத்தி, வெள்ளியும், பொன்னும் ஆபரணங்களால், தங்களை அலங்கரித்தால் அவர்களை தேவ மகிமையால், நிரப்புவதில்லை என்பதும், அவர்களோடே தேவன் பேசுவதில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார். ஆதலால் பிரியமானவர்களே நம்மை ஆபரணங்களால் அலங்கரிக்கிறதை விட்டு விட்டு, தேவனை மட்டும் பின்பற்றி அவருடைய வார்த்தைகளால் பரிசுத்தத்தை அலங்கரிப்போம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.